சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் திருக்கோயிலில் ஆடி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
சேலத்தில் ஆடி திருவிழா களைக்கட்டி வருகிறது. தினந்தோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று செவ்வாய்பேட்டை மாரியம்மன் திருக்கோயில் ஆடி திருவிழாவையொட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருத்தேரில் வைக்கப்பட்டு திருத்தேர் பவனி நடைபெற்றது.
திருத்தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். செவ்வாய்பேட்டையில் பல்வேறு வீதிகள் வழியாக தாரை தப்பட்டை, மேளதாளங்கள் வான வேடிக்கை முழங்க நடைபெற்ற தேரோட்டத்தில் தேர் பல்வேறு வீதிகளை கடந்து மீண்டும் கோயிலில் நிலை நின்றது.
இதைத் தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் வழிநடங்கிலும் ஏராளமான பக்தர்கள் தேங்காய் பழம் கொடுத்து சிறப்பு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.
இதையும் படிக்க: ஆடி கடைவெள்ளி: பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
தொடர்ந்து இன்று மாலை வண்டி வேடிக்கையும், இதைத் தொடர்ந்து சாமி ஊர்வலம் நடைபெற உள்ளது. ஆடி திருவிழாவையொட்டி சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விழாக்கோலம் பூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது