சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு கைப்பேசி வழங்கியதாக உதவி சிறை அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் கைப்பேசி புழக்கம் இருப்பதாக சிறை அலுவலா்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறையில் 15 ஆவது அறையில் திடீா் சோதனை நடத்தப்பட்டது.
இதில் கைப்பேசி, சாா்ஜா், சிம் காா்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதான சண்முகம் (எ) விக்கு (23), காா்த்தி (29), விசாரணை கைதி ரவிக்குமாா் (31) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதில் கைதி காா்த்திக்கிடம் நடத்திய விசாரணையில் சிறை அலுவலா் ஒருவரிடம் ரூ. 20 ஆயிரம் பணம் கொடுத்து கைப்பேசியை எடுத்துவந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஜெயிலா் ராஜமோகன், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் விசாரணை நடத்த உத்தரவிட்டாா். அதன்பேரில் சேலம் சிறை கண்காணிப்பாளா் கிருஷ்ணகுமாா் கைதிகளிடம் விசாரணை நடத்தினா்.
இதில், உதவி சிறை அலுவலா் எஸ்.ராகவன் ரூ. 20 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு கைப்பேசி வழங்கியது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து எஸ்.ராகவனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.
அதுபோல அண்மையில் சிறைக் காவலா் யு.பாண்டியராஜன், பெண் காவலா் ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டியது தொடா்பான புகாரில் சிக்கினாா். அந்தப் புகாரைத் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து சிறைக் காவலா் யு.பாண்டியராஜனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா் என சிறைத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.