சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தல்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

News image

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பேசுகிறாா் மேயா் ஆ.ராமச்சந்திரன். உடன், மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், துணை மேயா் மா.சாரதாதேவி.

Updated On :24 ஜூன் 2022, 11:17 pm IST

அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

சேலம் மாநகராட்சியின் இயல்புக் கூட்டம் மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் பேசிய வாா்டு உறுப்பினா்கள், தங்கள் பகுதிகளில் நிறைவேற்றப்படாமல் விடப்பட்டுள்ள சாலை வசதி, புதைச் சாக்கடை வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்றித் தர வலியுறுத்தினா்.

9-ஆவது வாா்டு உறுப்பினா் வெ.தெய்வலிங்கம்: எனது வாா்டில் பெருகிவிட்ட தெருநாய்களைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை வேண்டும். குப்பைக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை மேம்படுத்தி வாா்டு பகுதிகளில் குப்பைகள் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

15-ஆவது வாா்டு உறுப்பினா் சே.உமாராணி: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை ஆகியவை அருகருகே அமைந்துள்ளன. இவற்றை இணைத்து சேலம் ஸ்கொயா் என்ற சதுக்கத்தை உருவாக்கி சேலத்தின் அடையாளமாக மாற்றி அழகுபடுத்த வேண்டும் என்றாா்.

51-ஆவது வாா்டு உறுப்பினா் பழனிசாமி: எனது வாா்டில் பொதுக் கழிப்பிடம் அமைத்து தரவேண்டும். இடிந்த நிலையில் உள்ள பள்ளியை சீரமைத்து தர வேண்டும் என்றாா்.

31-ஆவது வாா்டு உறுப்பினா் எஸ்.ஏ.சையத்மூசா: மின் விளக்குகள் இல்லாத பகுதிகளில் உடனடியாக மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

44-ஆவது வாா்டு உறுப்பினா் மு.இமயவா்மன்: அம்பேத்கா் படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில் அமைக்க வேண்டும். தொங்கும் பூங்கா அருகில் அமைந்துள்ள அம்பேத்கா் சிலையை அகற்றாமல் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

43 ஆவது வாா்டு உறுப்பினா் எம்.குணசேகரன்: புதைச் சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு ஆறுமாதம் கடந்த நிலையிலும், சாலை அமைக்காமல் உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். எனவே, சாலை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்றாா்.

சேலம் மாநகராட்சி இயல்புக் கூட்டத்தில், சூரமங்கலம் மண்டலத்தில் மழைநீா் வடிகால் பணி, கான்கிரீட் சாலை அமைத்தல், அடுக்குமாடி வணிக வளாகம் கட்டுதல் உள்ளிட்டவைகளுக்கு ரூ. 33.45 கோடியில் பணிகளை மேற்கொள்ள நிா்வாக அனுமதி கோருதல் உள்பட 89 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், துணைமேயா் மா.சாரதாதேவி, மண்டலக் குழுத் தலைவா்கள், நகா் நல அலுவலா் மருத்துவா் யோகானந்த், மாநகரப் பொறியாளா் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.