சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் கீழ் ஊரக வளர்ச்சித் துறையில் கண்காணிப்பு பொறியாளராக சென்னையில் பணிபுரிந்து வரும் சரவணன் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஏற்கனவே அவரது வீட்டிலும், அவர் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பல கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பணம், தங்க நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைப்பற்றினார்கள்.
இந்நிலையில் இரண்டாவது முறையாக இன்று முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கோவை வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கீழ் இயங்கிய துறையான ஊரக வளர்ச்சித் துறையில் சென்னையில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றும் சரவணனுக்கு ஒப்பந்த பணிகள் விட்டதில் நடைபெற்ற ஊழலில் தொடர்பு இருக்கலாம் என்பதால் அவருடைய வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பொட்டனேரியில் கண்காணிப்பு பொறியாளர் சரவணனுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் இன்று காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் வீட்டுக்கு எதிரே உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறும் வீடு ஒதுக்குப்புறமாக கிராமத்தின் தோட்டப் பகுதியில் உள்ளதால் சோதனை நடைபெறுவது வெளியில் தெரியாமல் உள்ளது. சோதனை நடைபெறும் வீட்டில் சரவணன் சகோதரி தங்கம்மாள் மட்டுமே உள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோதனை நிறைவடைந்த பிறகு எவ்வளவு ஆவணங்கள், தங்க நகைகள், ரொக்கப் பணம் சிக்கியது என்பது குறித்து தெரியவரும்.