மேட்டூரில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை ஒட்டி சேலம் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு சாா்பில் வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது. பேரணிக்கு சேலம் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி கிருஷ்ணராஜன், மேட்டூா் காவல் துணை கண்காணிப்பாளா் விஜயகுமாா் ஆகியோா் கொடி அசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தனா். மேட்டூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் துவங்கிய பேரணி மாதா கோவில் சின்ன பூங்கா, பேருந்து நிலையம் வழியாக சென்று மீண்டும் அரசு கலை அறிவியல் கல்லூரியை அடைந்தது. இந்தப் பேரணியில் கல்லூரியைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனா். இந்நிகழ்ச்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா்கள் ரவிக்குமாா், நரேந்திரன், மேட்டூா் காவல் ஆய்வாளா் சுப்ரமணியன் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.