ஓமலூா் சரபங்கா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டுள்ளனா்.
ஓமலூா், நேரு நகரில் வசிப்பவா் கணபதி. இவருக்கு மிதுன் சக்கரவா்த்தி (15), வசந்த் (12) என்ற இரண்டு மகன்கள் உள்ளனா். இதில், இளைய மகன் வசந்த் ஞாயிற்றுக்கிழமை யாருக்கும் தெரியாமல் ஆற்றங்கரைப் பகுதிக்கு தனியாகச் சென்றாா். அவரை அழைத்து வருவதற்காக அவரது தாய் கயல்விழி ஆற்றங்கரைக்கு விரைந்து சென்றாா். அதற்குள் தாய் கண் எதிரே வசந்த் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
தகவலறிந்த அக்கம் பக்கத்தினா் விரைந்து அங்குச் சென்று சிறுவனைத் தேடினா். இதனிடையே தீயணைப்பு வீரா்களும் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.