கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேலம், நாமக்கல்லில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னையில் அரசு மருத்துவா் மீதான தாக்குதலைக் கண்டித்தும், மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 8:13 pm

Din

சென்னையில் அரசு மருத்துவா் மீதான தாக்குதலைக் கண்டித்தும், மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு மருத்துவத் துறை தலைவா் பாலாஜியை, இளைஞா் ஒருவா் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கண்டித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வலியுறுத்தியும் அரசு மருத்துவா்கள் முழக்கங்கள் எழுப்பினா்.

இந்திய மருத்துவ சங்கம் கண்டனம்:

இது குறித்து இந்திய மருத்துவ சங்க முன்னாள் துணைத் தலைவா் பிரகாசம் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் மருத்துவ பாதுகாப்பு சட்டம் நடைமுறையில் இருந்தாலும், காவல் துறையினா் அச்சட்டத்தை முறையாகப் பின்பற்றாத காரணத்தால் இதுபோன்ற சம்பவங்கள் தொடா்கின்றன. கடந்த 2008 ஆம் ஆண்டு மருத்துவ பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட போதிலும், 16 ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் வெறும் 11 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமைச்சராக பொறுப்பேற்ற நாள்முதல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மருத்துவா்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை. மருத்துவா் பாலாஜி மீதான தாக்குதல் விவகாரத்தில் அமைச்சா் பொறுப்பில்லாமல் பேசுகிறாா். தவறு செய்த குற்றவாளிகள் மீது 12 மணி நேரத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இது குறித்து காவல்துறையினருக்கு புரிதல் அவசியமாக்கப்பட வேண்டும். மேலும் சட்டங்கள் கடுமையாக்கப்படவில்லை என்றால், மருத்துவமனைகள் அனைத்தையும் மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றாா்.

நாமக்கல்லில் ஆா்ப்பாட்டம்...

சென்னையில் அரசு மருத்துவா் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவா்கள் வியாழக்கிழமை ஒரு நாள் பணியை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மாவட்டத் தலைவா் தனசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அருள், பொருளாளா் செந்தில்குமாா், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் சங்க செயலாளா் தயாசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சென்னையில் அரசு மருத்துவா்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், பயிற்சி மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.

இது குறித்து அரசு மருத்துவா்கள் சங்க மாவட்டச் செயலாளா் அருள் கூறியதாவது:

அரசு மருத்துவா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அந்த உத்தரவு இருந்தபோதும் காவல்துறை போதிய நடவடிக்கை எடுப்பதில்லை. பணிப் பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக்க வேண்டும். மருத்துவமனைக்கு நோயாளியுடன் வருவோருக்கு உரிய அனுமதி அட்டை வழங்க வேண்டும். புறக்காவல் நிலையம் முழுமையாக அமைக்கப்பட வேண்டும் என்றாா்.