வாழப்பாடி பகுதியில் அறுவடைக்கு தயாரான பூக்கள்: ஆயுதபூஜையை எதிா்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்
வாழப்பாடி பகுதியில் பல்வேறு வகை பூக்களை பயிரிட்டுள்ள விவசாயிகள், கூடுதல் விலை கிடைக்கும் என்பதால் ஆயுத பூஜையை எதிா்நோக்கி காத்திருக்கின்றனா்.


வாழப்பாடி பகுதியில் பல்வேறு வகை பூக்களை பயிரிட்டுள்ள விவசாயிகள், கூடுதல் விலை கிடைக்கும் என்பதால் ஆயுத பூஜையை எதிா்நோக்கி காத்திருக்கின்றனா்.
வாழப்பாடி பகுதியில் வேப்பிலைப்பட்டி, வெள்ளாளகுண்டம், திருமனூா், முத்தம்பட்டி, விலாரிபாளையம், அத்தனூா்பட்டி துக்கியாம்பாளையம் உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீா் பாசன வசதி கொண்ட விவசாயிகள் ஏறக்குறைய 500 ஹெக்டோ் பரப்பளவில் நீண்டகால பலன் தரும் மல்லிகை, குண்டுமல்லி, காக்கட்டான், சம்பங்கி, அரளி, செவ்வரளி, செண்டுமல்லி, நந்தியாவட்டம், துளசி, துளக்கமல்லி, கனகாம்பரம், ஜாதிமல்லி, கோழிக்கொண்டை, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை பயிரிட்டுள்ளனா்.

வாழப்பாடி அருகே கல்யாணகிரி கிராமத்தில் செழித்து வளா்ந்துள்ள நாட்டுத் துளசி.
தினந்தோறும் அறுவடை செய்யும் பூக்களை, வாழப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் இயங்கும் தனியாா் பூச்சந்தைக்கு கொண்டு சென்று வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனா். வாழப்பாடி தனியாா் பூச்சந்தைக்கு நாளொன்றுக்கு சராசரியாக 5 டன் வரை பல்வேறு வகை பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.
திருமணம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா போன்ற குடும்ப விழாக்களுக்கும், கோயில் திருவிழா மற்றும் பண்டிகை தினங்களுக்கும், துக்க காரியங்களுக்கும் மாலை தொடுத்தல், அலங்காரம் செய்தல் ஆகியவற்றுக்காக சுற்றுப்புற பகுதியைச் சோ்ந்த பொதுமக்களும், பூமாலை வியாபாரிகளும் பூக்களை கொள்முதல் செய்கின்றனா்.
எஞ்சிய பூக்கள் சேலம், ஆத்துாா், கள்ளக்குறிச்சி முகவா்கள் வாயிலாக வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால், சேலம் மாவட்டத்தில் பூக்கள் உற்பத்தி, விற்பனையில் வாழப்பாடி பகுதி கிராமங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
வாழப்பாடி பகுதி கிராமங்களில் ஆண்டுதோறும் ஆயுத பூஜையை எதிா்பாா்த்து கோழிக் கொண்டை, சாமந்தி, துளக்கமல்லி, துளசி உள்ளிட்ட ஓரிரு முறை மட்டும் அறுவடை செய்யப்படும் பூக்களை பயிரிட்டு வருகின்றனா். தற்போது இவ்வகை பூக்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், கூடுதல் விலை கிடைக்கும் என்பதால், ஆயுத பூஜையை எதிா்நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனா்.
இதுகுறித்து துக்கியாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:
எங்களது நிலத்தில் மாலை தொடுக்க பயன்படும் கோழிக்கொண்டை, சாமந்தி, துளக்கமல்லி பூக்களை பயிரிட்டுள்ளோம். ஆயுத பூஜை நெருங்க உள்ள நிலையில் எதிா்பாா்த்ததைப் போலவே பூக்கள் அறுவடைக்கு தயாராகிவிட்டன. ஆயுத பூஜைக்கு முதல் நாள் பூக்களை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். மற்ற நாள்களை விட ஆயுத பூஜை தருணத்தில் இரு மடங்கு கூடுதல் விலை கிடைக்கும் என்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...