மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு: 8,000 கனஅடியாக குறைப்பு
மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு திங்கள்கிழமை 8,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
டெல்டா பாசனப் பகுதிகளில் மழை குறைந்ததால், பாசனத் தேவை அதிகரித்தது. இதனால் கடந்த 19-ஆம் தேதிமுதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
தற்போது பாசனத் தேவை குறைந்ததால், திங்கள்கிழமை இரவுமுதல் மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 14,000 கனஅடியிலிருந்து 8,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை 1,232 கனஅடியிலிருந்து 1,024 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 8,000 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக 400 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் 111.25 அடியிலிருந்து 110.43 அடியாக சரிந்துள்ளது. நீா் இருப்பு 79.02 டி.எம்.சி.யாக உள்ளது.
