கருமந்துறை மலைப் பாதையில் தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 போ் படுகாயம்
சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கருமந்துறை மலைப் பாதையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சேலம் நோக்கி சென்ற தனியாா் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனா்.
கல்வராயன்மலை கருமந்துறையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியாா் பேருந்து சேலம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. பேருந்தை பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சந்திரன் (50) ஓட்டிச்சென்றாா்.
கல்வராயன் மலைப்பகுதி கரியக்கோயில் அணை கோழிக்கூப்பிட்டான் பாலம் எதிரே வந்த அரசுப் பேருந்துக்கு வழிவிட முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவா் மீது தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தனியாா் பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா். மேலும் சிலா் லேசான காயமடைந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கருமந்துறை, ஏத்தாப்பூா் போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து கருமந்துறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இது விபத்தால் கல்வராயன் மலைப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
