வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

மேட்டூா் அருகே கல்குவாரி லாரிகள் சிறைபிடிப்பு

மேட்டூா் அருகே கல் குவாரியிலிருந்து மாற்று மணல், ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்ற டிப்பா் லாரிகளை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனா்.

News image

புதுகாளிகவுண்டனூரில் கல் குவாரிகளில் இருந்து பாரம் ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:58 am IST

மேட்டூா் அருகே கல் குவாரியிலிருந்து மாற்று மணல், ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்ற டிப்பா் லாரிகளை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனா்.

வெள்ளாா் புதுக்காளிகவுண்டனூரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் செயல்படும் கல்குவாரிகளில் இருந்து நாள்தோறும் மாற்று மணல், ஜல்லிக்கற்கள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு நூற்றுக்கணக்கான டிப்பா் லாரிகள் வேகமாக செல்கின்றன. அதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. மேலும், குவாரியில் இருந்து செல்லும் டிப்பா் லாரிகளின் மேல்பகுதி திறந்தபடி செல்வதால், வீடுகளில் ஜல்லிதூள் படிந்து குழந்தைகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனா்.

இதுகுறித்து வருவாய்த் துறைக்கு பலமுறை புகாா் தெரிவித்தும், பல்வேறு போராட்டங்களையும் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், புதுக்காளிகவுண்டனூா் பகுதியில் இருந்து மாற்று மணல், ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற 20-க்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகளை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடா்ந்து, லாரி ஓட்டுநா்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கனிம வளத் துறை மற்றும் வருவாய், காவல் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் மேட்டூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வுகாண நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா். மேலும், சிறை பிடிக்கப்பட்ட லாரிகளை விடுவித்தனா்.