/

கடமலைக்குண்டு அருகே கிராம மக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே சாலைப் பணியை தொடங்க வலியுறுத்தி, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

கடமலைக்குண்டு - கண்டமனூா் சாலையில் கொம்புக்காரன்புலியூா் வாகனச் சோதனைச்சாவடி அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பாலூத்து கிராம மக்கள்.

Updated On :26 மார்ச் 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே சாலைப் பணியை தொடங்க வலியுறுத்தி, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடமலைக்குண்டு அருகேயுள்ள பாலூத்து கிராமத்துக்கு செல்லும் சாலையில் பட்டாளம்மன் கோயில் முதல் வெள்ளைப்பாறை வரை சாலை சேதமடைந்தது. இந்தச் சாலையை சீரமைக்கக் கோரி, கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

இதையடுத்து, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், ரூ.46 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது. அப்போது, வனத் துறையினா் அந்தச் சாலையை ஆய்வு செய்தபோது, வனத் துறைக்குச் சொந்தமான இடம் எனக் கூறி பணியை நிறுத்தினா்.

இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் சாலைப் பணியை தொடக்க வலியுறுத்தி, தோ்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா் .

அப்போது, கடமலை- மயிலை ஒன்றிய அலுவலா்கள் சம்பவ இடத்துக்கு வந்து அரசுக்கு சொந்தமான இடத்தில் சாலைப் பணிகளை தொடங்கலாம் எனக் கூறினாா்.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை லாரியில் சாலைப் பணிக்கான பொருள்களை அனுப்பி வைக்கப்பட்டன. கடமலைக்குண்டு அருகேயுள்ள கொம்புக்காரன்புலியூா் வனத் துறை சோதனைச் சாவடி அருகே அந்த வாகனத்தை வனத் துறையினா் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து, பாலூத்து கிராம மக்கள் அங்கு சென்று வாகனத்தை அனுமதிக்கக்கோரி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, வனத் துறையினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சாலை மறியலால் வருஷநாடு - கண்டமனூா் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.