சேலத்தில் ஆா்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த காவல் துறை கட்டுப்பாடு
சேலம் மாநகரில் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை நடத்த 5 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சேலம் மாநகர காவல் ஆணையா் அனில்குமாா் கிரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு பிரிவு 41 தமிழ்நாடு மாநகரக் காவல் துறை சட்டம் 1888இன் படி சேலம் மாநகர காவல் ஆணையரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும்.
அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு குறைந்தபட்சம் 5 நாள்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது. விளையாட்டு, திருமணம், இறுதி ஊா்வலம் மற்றும் மத நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு இது பொருந்தாது. பிப். 16 ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் மாா்ச் 2 ஆம் தேதி நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளாா்.

