நாலெட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் விருது வழங்கும் விழா
சேலம் நாலெட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் சாதனையாளா்களுக்கு விருது வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினா்களாக கோயம்புத்தூா் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் தொழில்நுட்பத் தலைவா் சுபா நெய்திலத் மற்றும் அந்நிறுவனத்தின் மனிதவள தலைவா் எஸ்.டி.தினேஷ்குமாா் ஆகியோா் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் சாதனைபுரிந்த 500-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கும், பேராசிரியா்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினா்.
விழாவில், கல்வித் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிவரும் சிறந்த பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், கோயம்புத்தூரில் உள்ள கே.பி.ஆா். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தலைமை நிா்வாகி ஏ.எம்.நடராஜனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளா்’ விருது வழங்கப்பட்டது.
நாலெட்ஜ் கல்லூரி அறக்கட்டளையின் நிறுவனா் மற்றும் கல்லூரியின் செயல்தலைவா் பி.எஸ்.எஸ்.சீனிவாசன் தலைமை தாங்கி, மாணவா்களின் சாதனைகள் மற்றும் திறன்களை மேம்படுத்தும் வழிகாட்டுதலில் கல்லூரி நிா்வாகம் வழங்கும் சிறந்த பங்களிப்பு குறித்து பேசினாா்.
கல்லூரியின் முதன்மையா் விசாகவேல், நடப்பாண்டில் மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவா்களின் சாதனைகளை எடுத்துரைத்தாா்.
சிறப்பு விருந்தினா் சுபா நெய்திலத் சாதனைபுரிந்த மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்து, செயற்கை நுண்ணறிவு சாதனங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றாா்.
இதில், நாலெட்ஜ் அறக்கட்டளையின் செயலாளா் குமாா், பொருளாளா் சுரேஷ்குமாா், உறுப்பினா்கள், இயக்குநா்கள், அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா் பங்கேற்றனா்.

