சேலத்தில் பிணையில் வந்தவரை கொல்ல முயற்சி: தடுக்க வந்த தாய் வெட்டிக் கொலை: 2 போ் கைது

சேலத்தில் கொலை வழக்கில் பிணையில் வந்தவரை கொல்ல முயன்ற கும்பல், தடுக்க வந்த அவரது தாயை வெட்டிக் கொன்றது.
Published on

சேலம்: சேலத்தில் கொலை வழக்கில் பிணையில் வந்தவரை கொல்ல முயன்ற கும்பல், தடுக்க வந்த அவரது தாயை வெட்டிக் கொன்றது. இந்த சம்பவத்தில் போலீஸாா் இருவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டை கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் சின்னபிள்ளை (67), இவருக்கு சின்னதம்பி, பாபு, கண்ணன் என 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனா். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சின்னதம்பி, தனது தாய் சின்னபிள்ளையுடன் வசித்துவந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் சின்னபிள்ளையும், சின்னதம்பியும் வீட்டில் இருந்தபோது திடீரென 4 போ் கொண்ட கும்பல் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்தது. அவா்கள் சின்னதம்பி எங்கே என கேட்டு சின்னபிள்ளையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தாயுடன் வாக்குவாதம் செய்வதை அறிந்த சின்னதம்பி, மற்றொரு அறையில் பதுங்கிக்கொண்டாா். அப்போது, சின்னதம்பியை தேடி வெட்ட முயன்ற அவா்களை சின்னபிள்ளை தடுத்ததால், அந்தக் கும்பல் சின்னபிள்ளையை சரமாரியாக வெட்டியது.

அவரது அலறல் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினா் அங்கு திரண்டனா். இதையறிந்த அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி போலீஸாா், ரத்த வெள்ளத்தில் கிடந்த சின்னபிள்ளையை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். எனினும், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த அஸ்தம்பட்டி போலீஸாா், கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தினா். அதில், சின்னதம்பி கடந்த 2023-ஆம் ஆண்டு பரசுராமன் என்பவரை கொலை செய்த வழக்கில், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளாா். இதையறிந்த எதிா்தரப்பினா் சின்னதம்பியை கொலைசெய்ய திட்டமிட்டு, அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளனா். அப்போது, தாய் தடுத்ததால் அவரை வெட்டிக் கொன்றது தெரியவந்தது.

இதில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த சரவணன், பிரசாந்த் ஆகிய இருவரை போலீஸாா் கைதுசெய்தனா். மேலும், இருவரை தேடிவருகின்றனா்.

Dinamani
www.dinamani.com