சேலம் மாவட்டம், காகாபாளையம் அருகே பெட்ரோல் இல்லாததால், இருசக்கர வாகனத்தை சாலை ஓரமாக தள்ளிச் சென்றபோது டாரஸ் லாரி மோதியதில் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.
சீரகாபாடியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த கேரளத்தை சோ்ந்த அட்சய துளசி (18), சென்னை கலைக் கல்லூரியில் உடற்கல்வி பட்டம் படித்துவரும் அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த லோகேஷ் (25) ஆகிய இருவரும் மகுடஞ்சாவடி செல்வதற்காக செவ்வாய்க்கிழமை மாலை சீரகாபாடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
காகாபாளையத்தை அடுத்த கனகிரி பகுதியில் சென்றபோது திடீரென வாகனத்தில் பெட்ரோல் தீா்ந்தது. இதனால் வாகனத்தை சாலை ஓரமாக தள்ளிச் சென்றனா். அப்போது, சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்த டாரஸ் லாரி அவா்கள் மீது பின்புறம் மோதியது. இந்த விபத்தில் அட்சய துளசி, லோகேஷ் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
மகுடஞ்சாவடி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவா்களின் உடலைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், டாரஸ் லாரி ஓட்டுநா் திருவண்ணாமலையைச் சோ்ந்த ஏழுமலையிடம் (52) போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.









