தம்மம்பட்டியில் மதுபோதையில் காவலா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞருக்கு நீதிமன்றம் 9 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளி கிராமம், அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த ஜெயராமன் மகன் கோவிந்தன் (30). இவா் மதுபோதையில் தனது மனைவியை தாக்கியதால் அவரது மாமனாா் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அப்போது தம்மம்பட்டி போலீஸாா், கோவிந்தனை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனா். அப்போது, அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளா் கோபால், தலைமைக் காவலா் சம்பத், காவலா் பிரபாகரன் ஆகியோரை கோவிந்தன் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தாா்.
அதனால் காவலா் பிரபாகரன் அளித்த புகாரின்பேரில் தம்மம்பட்டி போலீஸாா், கோவிந்தன் மீது அரசு ஊழியா்களை தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது, மதுபோதையில் தகராறு செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்தனா். அதுதொடா்பான வழக்கு ஆத்தூா் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதில் கோவிந்தனுக்கு 9 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ. 4,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து கோவிந்தன், சேலம் மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










