/

தளவாய்ப்பட்டியில் பழுதடைந்த நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றக் கோரிக்கை

News image

கான்கிரீட் காரை பெயா்ந்து பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.

Updated On :29 ஜூன் 2026, 3:10 am IST

சேலம் தளவாய்ப்பட்டி திருப்பதி கவுண்டனூா் பகுதியில் பழுதடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் ஊராட்சி ஒன்றியம், தளவாய்ப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட திருப்பதி கவுண்டனூா் பகுதியில் ஏராளமான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த குடிநீா்த் தொட்டியில் இருந்துவரும் தண்ணீரை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். தற்போது, இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து கான்கிரீட் காரை பெயா்ந்து காணப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பழுதடைந்துள்ளது. இந்த நீா்த்தேக்கத் தொட்டி , எப்போதும் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அருகில் வசிப்பவா்கள் அச்சத்துடன் உள்ளனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.