ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன. 8:விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக மைதானத்தில் 29-வது மாநில அளவிலான மூத்தோர் தடகளப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கியது.
இந் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மூத்தோர் தடகளக் கழக ஆயுள்காலத் தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம் தலைமை வகித்தார். செயல் தலைவர் செங்கைசிவம் முன்னிலை வகித்தார். கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன், போட்டியைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரா.கிருஷ்ணமூர்த்தி, அகில இந்திய மூத்தோர் தடகளக் கழகப் பொதுச் செயலாளர் டேவிட் பிரேம்நாத், உதவித் தலைவர் மேஜர் பீடு, ஒருங்கிணைப்பாளர் சுப்புராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
95 வயது மகளிர் ஓட்டப் பந்தயப் பிரிவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள கப்பலாம்பாடியைச் சேர்ந்த கோபால் மனைவி உண்ணாமலை (96) முதலிடம் பெற்றார். இவர், கடந்த 3 ஆண்டுகளாக இப் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று சாதனைப் படைத்து வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) நடைபெறும் நிறைவு விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பரிசுகளை வழங்குகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.