/

போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை

போடி, செப். 14:÷போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், பல பணிகள் தேக்கமடைந்துள்ளன. தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம், போடி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:24 am

எஸ்.​ வெங்கடாசலம்

போடி, செப். 14:÷போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், பல பணிகள் தேக்கமடைந்துள்ளன. தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேனி மாவட்டம், போடி வட்டத்தில் போடிநாயக்கனூர், மேலச்சொக்கநாதபுரம், மேற்குமலை, வடக்குமலை, கொட்டகுடி, அகமலை, கோடாங்கிபட்டி, பூதிப்புரம் உள்பட 15 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவற்றின் கீழ் 71 உட்கடை கிராமங்கள் உள்ளன. போடி நகராட்சி, மேலச்சொக்கநாதபுரம், மீனாட்சிபுரம், பூதிப்புரம் பேரூராட்சிகளும் போடி வட்டத்தில் உள்ளது.

இப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்று, பட்டா மாறுதல், சிட்டா, அடங்கல், புதிய ரேஷன் அட்டை, நலத் திட்ட உதவிகள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு சான்றுகள் மற்றும் ஆவணங்களைப் பெற போடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வருகின்றனர்.

ஆனால், அதற்கேற்ப போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் போதிய ஊழியர்கள் இல்லை. இதனால் பல பணிகள் தேக்கமடைந்துள்ளன.

நிலம் சர்வே செய்வதற்கு விண்ணப்பித்து ஒரு மாதத்துக்கு பின்புதான் பணிகள் நடைபெறுகின்றன. பட்டா மாறுதல், பட்டா பெறுதல் போன்ற பணிகளுக்கு 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகின்றன. வாரிசு சான்று பெற ஒரு மாதம் ஆகிறது. கணினி பிரிவில் தானியங்கி தகவல் தரும் கணினி இயந்திரம் பழுதடைந்து பல மாதங்கள் ஆகியும் சரி செய்யப்படவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு ஏராளமான மனுக்கள் குவிந்து வருகின்றன. ஆனால் அவற்றுக்கு விரைவாக பதில் கிடைப்பதில்லை.போடி வட்டத்தில் உள்ள 15 வருவாய் கிராமங்களில் தற்போது 9 கிராம நிர்வாக அலுவலர்களே பணியில் உள்ளனர். அகமலை, வடக்குமலை, மேற்குமலை ஆகிய மலை கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால், அப்பகுதியினர் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து போடி வட்டாட்சியர் வ. ஜெயக்கொடியிடம் கேட்டபோது, வட்டாட்சியர் அலுவலகத்தில் 7 உதவியாளர் பணியிடம் உள்ளது. ஆனால் 3 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அதிலும் 2 பேர் பயிற்சிக்காக சென்றுவிட்டனர். ஒரு பணியாளரை வைத்து அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதனால் அவசரம் என வரும் பணிகளை மட்டும் செய்கிறோம். இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தல், கிரைண்டர், மிக்ஸி வழங்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. தகவல் தரும் கணினி இயந்திரதை பழுது நீக்கம் செய்ய பெங்களூரிலிருந்து பொறியாளர்கள் வரவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.