சாலை மறியல்: பேராசிரியா்கள் 100 போ் கைது
இணைப் பேராசிரியா் பணி மேம்பாடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேராசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை பெத்தானியபுரம் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மூட்டா அமைப்பின் பொதுச் செயலா் செந்தாமரைக் கண்ணன், ஏ.யூ.டி. பொதுச் செயலா் சேவியா் செல்வகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாட்டு ஊதியம், நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். உதவிப் பேராசிரியா்களுக்கு, இணைப் பேராசிரியா் பணி மேம்பாடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா், அவா்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினா். ஆனால், தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், 28 பெண்கள் உள்பட 100 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவா்களை மாலையில் விடுவித்தனா்.

