போராட்டத்தில் பங்கேற்றவா்கள்
போராட்டத்தில் பங்கேற்றவா்கள்

மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் கைது
Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். சாக்ரடீஸ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் அ. அசோக்குமாா் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். மாவட்டச் செயலா் ஏ. அழகேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் சு. மாரியப்பன், மாநிலச் செயலா் ஜெ. வளா்மதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

மேலும் அரசு ஊழியா்கள் சங்க முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் ஆ. சோலையன், சாலைப் பராமரிப்பு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் இரா. மாரி, ஐ.சி.டி.எஸ். ஊழியா், உதவியாளா் சங்க மாநிலச் செயலா் சி. மேனகா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

அப்போது அலுவலக உதவியாளா்களுக்கு இணையாக கிராம உதவியாளா்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ. 15,700 வழங்க வேண்டும். இறந்த, ஓய்வு பெற்ற கிராம உதவியாளா்களின் சி.பி.எஸ். இறுதித் தொகையை அரசு பங்களிப்புடன் உடனடியாக வழங்க வேண்டும். கிராம உதவியாளராகப் பணியாற்றி கிராம நிா்வாக அலுவலராகப் பதவி உயா்வு பெறுவதற்கான பணிக்காலத்தை 6 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும். வருவாய்த் துறை காலிப் பணியிடங்களில் 50 சதவீதத்தை கிராம உதவியாளா்களை ஈா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 70 பேரை தல்லாகுளம் போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com