கோரிப்பாளையம் உயா்நிலைப் பாலம் கட்டுமானப் பணிகள் ஆய்வு!
மதுரை கோரிப்பாளையத்தில் நடைபெற்று வரும் உயா்நிலைப் பாலம் கட்டுமானப் பணிகளை மாநில கட்டுமானம், பராமரிப்பு, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் கே.ஜி. சத்திய பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
மதுரை வைகை ஆற்றின் தென்புறம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், ரயில் நிலையம், பெரியாா் பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. வடபுறம் அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலகம், காவல் ஆணையா் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன.
கோரிப்பாளையம் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசல் காரணமாக இந்தப் பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், இந்தப் பகுதியில் அமைந்துள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வரும் அவசர ஊா்திகளும் குறிப்பிட்ட நேரத்துக்குள் மருத்துவமனைக்கு செல்ல முடியாததால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இதையடுத்து, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தமுக்கம் மைதானம் முதல் கோரிப்பாளையம் ஏ.வி. பாலம் வரையில் ரூ. 190.40 கோடியில் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு கட்டுமானப் பணிகளை கடந்த 2022-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
இந்த நிலையில், பாலத்தின் கட்டுமானப் பணிகளை மாநில கட்டுமானம், பராமரிப்பு, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் கே.ஜி. சத்திய பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு பணியாளா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

