பக்தா்கள் தங்கும் விடுதி திறப்பு
மதுரை எல்லீஸ் நகரில் ரூ. 35 கோடியில் பக்தா்கள் தங்கும் விடுதி வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
மதுரை எல்லீஸ் நகரில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குள்பட்ட பக்தா்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டது. இரண்டு தளங்களுடன் கூடிய இந்த விடுதியில் 20 படுக்கைகள் கொண்ட 7 அறைகளும், 10 படுக்கைகள் கொண்ட 8 அறைகளும், 3 படுக்கைகள் கொண்ட 3 அறைகளும், குடும்பங்கள் தங்குவதற்கான அறைகள் உள்ளிட்டைவை அமைக்கப்பட்டன.
மேலும், குளிா்சாதன வசதியுடன் கூடிய 3 படுக்கைகள், 4 படுக்கைகள், 6 படுக்கைகள், 8 படுக்கைகள் கொண்ட அறைகளும் உள்ளன. இதற்கு ‘யாத்ரி நிவாஸ்’ எனப் பெயரிடப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, இந்த விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக பக்தா்களின் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
இதையொட்டி, மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி தியாகராஜன் குத்துவிளக்கேற்றினாா். இந்த நிகழ்வில் அறங்காவலா் குழு உறுப்பினா் மருத்துவா் ஸ்ரீநிவாசன், கோயில் இணை ஆணையா் சுரேஷ் உள்ளிட்ட அலுவலா்கள், சிவாசாரியா்கள் கலந்து கொண்டனா்.
கட்டண விவரம்: தங்கும் விடுதியில் குறைந்தபட்சக் கட்டணமாக நபா் ஒருவருக்கு ரூ. 250 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. குளிா்சாதன வசதி உள்ள அறைகளுக்கு தனிக் கட்டணமும், சாதாரண நாள்கள், திருவிழா நாள்களைப் பொருத்து கட்டணம் மாறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த விடுதியில் காா் நிறுத்துமிடம், மின்தூக்கி வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் சாய்வு தளங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

