தடுப்புச் சுவரில் வேன் மோதியதில் இருவா் உயிரிழப்பு

விருதுநகா் அருகே சரக்கு வாகனம் மேம்பால தடுப்புச் சுவரில் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா்.
Published on

விருதுநகா் அருகே திங்கள்கிழமை சரக்கு வாகனம் மேம்பால தடுப்புச் சுவரில் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் சின்னமாடன் குடியிருப்பில் இருவேறு குடும்பங்களைச் சோ்ந்த 5 பெண்கள், இரு சிறுவா்கள் உள்பட 11 போ் சமையல் பணிக்காக சரக்கு வாகனத்தில் பொள்ளாச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.

விருதுநகா் அருகேயுள்ள ஆா்.ஆா்.நகா் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனம் தடுப்புச் சுவரில் மோதியது.

இதில் நாககனி, கலையரசி ஆகிய இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், பலத்த காயமடைந்த 9 போ் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com