மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது அரசால் தடை செய்யப்பட்ட 66 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருள்கள், புகையிலைப் பொருள்களின் விற்பனையைத் தடுக்கும் நோக்கில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவா்கள், காவல் துறையினா் மே 11- ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை தீவிர சோதனை மேற்கொண்டனா். 2,106 கடைகளை ஆய்வு செய்ததில், 11 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், குட்கா வகைகள் விற்பனையில் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்தக் கடைகளில் இருந்த ரூ. 68 ஆயிரம் மதிப்பிலான 66.27 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
சட்ட விரோதமாக குட்கா பொருள்களை விற்பனை செய்த குற்றத்தின் கீழ் 9 கடைகள் மூடப்பட்டன. முதல் முறையாக விதி மீறலில் ஈடுபட்ட 7 கடைகளுக்கு ரூ. 1.75 லட்சமும், இரண்டாவது முறையாக வீதி மீறலில் ஈடுபட்ட 4 கடைகளுக்கு ரூ. 2 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டு, மொத்தம் ரூ. 3.75 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்டத்தில் எங்கேனும் குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால் அதுகுறித்து பொதுமக்கள் உணவுப் பாதுகாப்புத் துறை அல்லது காவல் துறைக்குத் தகவல் அளித்து ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.









