பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டது சாமானிய மக்கள் மட்டுமே என திமுக துணைப் பொதுச் செயலர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் புதன்கிழமை பண மதிப்பிழப்பு மூலம் இந்திய பொருளாதாரத்தை சீரழித்த மத்திய அரசு என்ற தலைப்பில், திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:
கருப்பு பணத்தை ஒழிப்போம் என்ற கோஷத்துடன் மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பால், சாமானிய மக்களே அதிகம் பாதிப்படைந்துள்ளனர். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு பெருமுதலாளிகளின் முகத்திரையை கிழிப்பேன் என நிதி அமைச்சர் ஜெட்லி தெரிவித்தார். ஆனால், இன்று வரை எந்த கருப்புப் பணமும் மீட்கப்பட வில்லை. பண மதிப்பிழப்பு மட்டுமின்றி, ஜிஎஸ்டியினாலும் விவசாயிகள், வியாபாரிகள், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரு பாதிப்படைந்துள்ளனர்.
அதே போல் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவமும் சிதைந்துவிட்டது. குதிரை பேர அரசியலுக்கு வழிவகுத்து, ஜனநாயகத்தை படுகொலை செய்த அரசாக இன்றைய மத்திய பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்தியாவுக்கு முதலாளித்துவம் தேவையில்லை. எனவே நாடு வளர்ச்சி பெறுவதற்கு, அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு ஆட்சியாளர்கள் துணை நிற்க வேண்டும் என்றார்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்டச் செயலர்கள் அர.சக்கரபாணி (மேற்கு), பெ.செந்தில்குமார் (கிழக்கு), ஆண்டி அம்பலம் எம்எல்ஏ, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அப்துல்கனி ராஜா, சிவசக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.