பிழையில்லா வாக்காளர் பட்டியல் தயாரிப்பதை உறுதி செய்யும் வகையில், வாக்காளர் விவரங்களை வீடுகள்தோறும் சென்று சரிபார்க்கும் சிறப்பு ஆய்வு, திண்டுக்கல் மாவட்டத்தில் 15 நாள்கள் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தெரிவித்ததாவது:
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காக சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அந்தந்தப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று, வாக்காளர்களின் குடும்ப விவரங்கள், தொடர்பு விவரம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம் ஆகிய அனைத்து விதமான படிவங்கள் பெற்று, கள விசாரணையில் ஈடுபட உள்ளனர்.
மேலும், 2019 ஜனவரி முதல் நாளை தகுதியாகக் கொண்டு எதிர்கால இளம் வாக்காளர்களின் விவரங்களையும் சேரிக்க உள்ளனர்.
செல்லிடப்பேசி பயன்பாட்டின் மூலம் ஒவ்வொரு வீட்டின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை புள்ளி கண்டறிதல், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் விவரங்கள் சேகரித்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெறும். இந்தப் பணி, நவம்பர் 15 முதல் 30ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
ஆய்வு மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட அலுவர்களுக்கு உரிய பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஆய்வுக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு துணை புரியவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.