முதல் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம்
திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்காக நடைபெற்ற சிறப்பு குறைதீர் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முகாமிற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:
மாற்றுத் திறனாளிகள் துறை சார்பில், பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, பிற துறைகள் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கும் வகையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாதந்தோறும் நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியிலிருந்து தலா ரூ.61 ஆயிரம் மதிப்பீட்டில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவ அடையாள அட்டைகள் வழங்க ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான முதல் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 4 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால்களை ஆட்சியர் வினய் வழங்கினார். முகாமில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு மனு அளித்தனர்.
கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் இந்திரவள்ளி, மாநகராட்சி ஆணையாளர் ந.மனோகர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
