ஒட்டன்சத்திரம் அருகே வாடகை வீட்டில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி 17-வது வார்டு லட்சுமிபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இங்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் லட்சுமிபுரம், சண்முகவேல்புரம், பழனிக்கவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த நிலையில் இந்த பள்ளி அமைந்துள்ள இடத்தின் வழியாக நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனால் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் 21 மாணவ-மாணவிகளை சண்முகவேல்புரத்தில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து, அங்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து சண்முகவேல்புரத்தை சேர்ந்த ரவி கூறியதாவது, இந்த வீட்டுக்கு முன்பணம் ரூ.5 ஆயிரமும், மாத வாடகை ரூ.900 மும் கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்த வீட்டில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. குடிநீர், கழிப்பறை, மின்சாரம் என எந்தவித வசதிகளும் கிடையாது. இவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. அதே போல மதிய உணவு சமைப்பதற்கும் இடவசதி இல்லாததால் சத்துணவு அமைப்பாளர் தனது வீட்டிலேயே சமைத்து எடுத்து வந்து பரிமாறி செல்லும் அவலநிலை உள்ளது.
இதனால் பள்ளி கட்டடம் கட்ட தனியார் ஒருவர் 10 சென்ட் இடம் தருவதாக கூறியுள்ளார்.ஆனால் அந்த நிலத்திற்குச் செல்ல சாலை வசதி இல்லை.
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்தால் புதிய கட்டடம் கட்ட வசதியாக இருக்கும். இல்லையெனில் அருகில் இருக்கும் அணைப்பட்டி (இறையகவுண்டன்புதூர்) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடத்தில் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும். அங்கு போதிய கட்டட வசதி உள்ளது. இருந்தாலும் மழைக்காலத்தில் அங்கு சென்று படித்து வர மாணவ-மாணவிகள் சிரமப்பட நேரிடும்.
எனவே சண்முகவேல்புரத்திலேயே ஒரு கட்டடத்தை கட்டி கொடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







