திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மூலவர் சிலை புதிதாக வடிவமைத்ததில் முறைகேடு நடைபெற்றதாக கோயிலின் முன்னாள் உதவி ஆணையர் மற்றும் முன்னாள் தங்க நகை சரிபார்ப்பு அலுவலர் ஆகிய இருவரையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 2004 ஆம் ஆண்டு நவபாஷாண மூலவர் சிலை சேதமடைந்ததாக கூறி, புதிய சிலை தங்கத்தால் வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த புதிய சிலையை வடிவமைக்க 10 கிலோ தங்கம் திருத்தணி முருகன் கோயிலிலிருந்து கடனாக பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புதிய சிலையை காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தைச் சேர்ந்த முத்தையா ஸ்தபதி (77) என்பவர் வடிவமைத்துள்ளார்.
இந்த சிலை வடிவமைத்ததில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் கொடுத்த புகாரின்
அடிப்படையில், சிலையை வடிவமைத்த முத்தையா ஸ்தபதி, அப்போது கோயிலின் செயல் அலுவலராக இருந்த கே.கே.ராஜா (66) ஆகிய இருவரையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த மார்ச் 24ஆம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவரான பழநி கோயிலின் முன்னாள் உதவி ஆணையரும், பழநி பழைய ஆயக்குடி கிழக்குச் தெருவைச் சேர்ந்த நா. புகழேந்தி (60), சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த முன்னாள் தங்க நகைகள் சரிபார்ப்பு அலுவலர் ம. தேவேந்திரன் (67) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் திங்கள்கிழமை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இவர்களை விசாரித்த நீதிபதி, இருவரையும் வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இருவரையும் போலீஸார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.