பழனி அருகே உள்ள தொப்பம்பட்டியில் தரமற்ற முறையில் சாலை அமைக்கப்படுவதாக கூறி, அப்பணிகளை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினர்.
தொப்பம்பட்டி - மரிச்சிலம்பு வரை 5 கி.மீ. தூரத்துக்கு ரூ.40 லட்சம் செலவில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஒப்பந்ததாரர் தரமின்றி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சில கி.மீ தூரமே சாலை அமைக்கப்பட்ட நிலையில் பயன்பாட்டுக்கு வரும் முன்பே அச்சாலை பெயர்ந்துவிட்டது. இதுகுறித்து கிராமத்தினர் தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தரமற்ற முறையில் தொடர்ந்து சாலை அமைக்கக்கூடாது எனக்கூறி, பொதுமக்களே பணிகளை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து கிராமமக்கள் கூறியது: தொப்பம்பட்டி ஒன்றிய பொறியாளரிடம் சாலைப் பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக பலமுறை கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால், அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனரோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் பணிகளை ஆய்வு செய்து தார்ச்சாலையை தரமான முறையில் அமைக்க வேண்டும்.
இல்லாவிட்டால், வரும் நாள்களில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








