அதிமுக எம்எல்ஏ-க்கள் 3 பேர் நேற்று ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்த நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜிநாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார்.
இந்தத் தேர்தலில் திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றன. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இரண்டாக உடைந்தது.
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக எம்எல்ஏ-க்களில் சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் 25 பேர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால், சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்களை அதிமுக கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
அதிமுக பிரிந்ததைத் தொடர்ந்து கொறடா, சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் நேற்று (மே 25) சந்தித்துப் பேசியிருந்தனர்.

மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா.
இந்த நிலையில், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்புக்கு ஆதரவாக இருந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரையும், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரையும், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் 9,693 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரையும் தோற்கடித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நான்காவதாக வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு அதிமுகவின் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா இன்று ராஜிநாமா செய்து தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை பேரவைத் தலைவரைச் சந்தித்து அவர் தனது ராஜிநாமா கடிதத்தைக் கொடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடந்துமுடிந்த தேர்தலில் இசக்கி சுப்பையா அதிமுக சார்பில் 65,589 வாக்குகள் பெற்று 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வி.பி. துரையை தோற்கடித்திருந்தார்.
ஏற்கனவே 3 பேர் ராஜிநாமா செய்த நிலையில் 4-வதாக இசக்கி சுப்பையா ராஜிநாமா செய்தால் அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 43 ஆக குறையும்.
Summary
Reports suggest that AIADMK MLA Isakki Subbiah is set to resign
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










