திண்டுக்கல் அருகே உலகம்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 18 வீரர்கள் காயமடைந்தனர்.
உலகம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 534 காளைகள் அழைத்துவரப்பட்டன.
வாடி வாசலுக்குள் காளைகளை அனுப்பும் முன்பு, கால்நடைத்துறை உதவி இயக்குநர் எஸ்.சுப்பையாபாண்டியன் தலைமையிலான கால்நடை மருத்துவக் குழுவினர் பரிசோதித்தனர். இதில், 3 காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதேபோல், 382 மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களில், 11 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 371 வீரர்கள் களத்தில் இறங்கி, வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை எதிர் கொண்டனர். இதில், காளைகளை தழுவ முயன்றபோது, காளைகள் முட்டியது என 18 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல், வாடிவாசல் களத்தில் காயமடைந்த 2 காளைகளுக்கும், கால்நடை பராமரிப்புத்துறையினர் உடனடியாக சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனர்.
போட்டியில் வெற்றிபெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும், வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, சில்வர் அண்டா உள்ளிட்ட பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









