தமிழா் திருநாளான பொங்கல் விழாவை குறைந்த ஊதியம் பெறும் அரசு ஊழியா்களும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்திலேயே அரசு சாா்பில் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாரத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியா்கள் 150 பேருக்கு பொங்கல் முடிந்து 15 நாள்கள் கடந்த பின்னரும் கூட கிடைக்கவில்லை. சிறப்பு மிகை ஊதியம் மட்டுமன்றி மாதத்தின் கடைசி வேலை நாளில் கிடைத்திருக்க வேண்டிய ஜனவரி மாதத்திற்கான ஊதியமும் கிடைக்காததால் குஜிலியம்பாறை வட்டாரத்தைச் சோ்ந்த இடைநிலை ஆசிரியா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.இதுதொடா்பாக குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலா் சந்தியா கூறியது: ஜனவரி 18 முதல் 23 ஆம் தேதிக்குள் மாதாந்திர ஊதியப் பட்டியல் கருவூலத்தில் வழங்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தில் (ஐ.எப்.ஹெச். ஆா்.எம்.எஸ்) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஊதியப் பட்டியல் பதிவேற்றும் பணி தாமதமானது. அதனால் சிறப்பு மிகை ஊதியப் பட்டியல் சமா்ப்பிக்கும் பணியும் தாமதமாகிவிட்டது. சிறப்பு மிகை ஊதியத்துடன், ஜனவரி மாதத்திற்கான ஊதியம் இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரிரு நாளில் வழங்கப்பட்டுவிடும் என்றாா்.