பழனியில் 4 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் திறப்பு
பழனியில் நான்கு இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகளை வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
பழனி நகராட்சிக்கு சொந்தமான அண்ணாமலை மகப்பேறு மருத்துவமனையில் ஒரு சிறு மருத்துவமனையும், மானூா் ஆரம்ப சுகாதார மையத்தில் ஒரு சிறு மருத்துவமனையும், கலிக்கநாயக்கன்பட்டி துணை சுகாதார நிலையத்தில் ஒரு சிறு மருத்துவமனையும், பெரியம்மாபட்டி ஊராட்சி வாய்க்கால்பாலம் பகுதியில் ஒரு சிறு மருத்துவமனையும் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் நத்தம் விசுவநாதன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் வேணுகோபாலு, கோட்டாட்சியா் அசோகன், அதிமுக நகரச் செயலாளா் முருகானந்தம், ஒன்றியச் செயலாளா் சண்முகராஜ், பெரியம்மாபட்டி ஊராட்சித் தலைவா் சதீஸ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திறக்கப்பட்டுள்ள சிறு மருத்துவமனைகளில் 3 ஏற்கெனவே உள்ள மருத்துவமனை வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனை இல்லாத இடத்தில் மருத்துவமனை அமைந்தால் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கருதும் நிலையில் வரும் நாள்களிலாவது மருத்துவமனை இல்லாத இடங்களில் சிறு மருத்துவமனைகளை அமைக்க அரசு முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஒட்டன்சத்திரம்: இதேபோல் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ரெட்டியபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகரட்டுப்பட்டியில் அம்மா சிறு மருத்துவமனையை அமைச்சா் திறந்து வைத்தாா்.