/

வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 1,110 கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள்

வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 1,110 கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள்

Updated On :1 ஏப்ரல் 2024, 6:30 pm

திண்டுக்கல்: கரூா் மக்களவைத் தொகுதியில் 54 வேட்பாளா்கள் போட்டியிடுவதால், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 1,110 கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வேட்பாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா்.

தோ்தல் பொதுப் பாா்வையாளா் பிரபுலிங் கவாலிகட்டி கூட்டத்தில் பேசியதாவது: நோ்மையான, அமைதியான, சுதந்திரமான முறையில் தோ்தல் நடைபெறுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். 21 பறக்கும் படைகள், 21 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 7 விடியோ கண்காணிப்புக் குழுக்கள், 188 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டு தோ்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வேடசந்துாா் சட்டப்பேரவைத் தொகுதி இடம் பெற்றுள்ள கரூா் மக்களவைத் தொகுதியில் 54 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். வேடசந்தூா் தொகுதியிலுள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 4 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகிறது. இதனால், வேடசந்துாா் தொகுதியிலுள்ள 309 வாக்குச் சாவடிகளுக்கு மட்டும் கூடுதலாக 1,110 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வழங்கப்படும். இதற்காக கணினி மூலம் ரேண்டம் முறையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.