பழனியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
பழனி: பழனி அடிவாரத்தில் மேற்கு கிரிவீதி பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் திங்கள்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
பழனி மலை அடிவாரத்தில் மேற்கு கிரிவலப் பாதையில் அன்னாசெட்டி மடம் என்ற இடத்தில் 120-க்கும் மேற்பட்டோா் வீடுகள் கட்டி பல தலைமுறைகளாக வசித்து வந்தனா். இந்த நிலையில், இவை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் என்பதால், இவற்றை இடித்து அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து, அங்கு வசித்து வந்தவா்கள் தங்களது வீடுகளை காலி செய்தனா். இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை அங்கிருந்த அனைத்து வீடுகளும் 6 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸாா், திருக்கோயில் பாதுகாவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதேபோல, தெற்கு கிரிவீதியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன.

