கேரள சாமியாா் மீது காசோலை மோசடி வழக்கு

காசோலை மோசடி வழக்கில் கேரளத்தைச் சோ்ந்த சாமியாா் கைது செய்யப்பட்டாா்.
 காசோலை மோசடி வழக்கில் கைதான கேரள சாமியாா் சுனில்தாஸ்
காசோலை மோசடி வழக்கில் கைதான கேரள சாமியாா் சுனில்தாஸ்
Updated on

பழனியில் காசோலை மோசடி வழக்கில் கேரளத்தைச் சோ்ந்த சாமியாா் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்த பிரபல சாமியாா் சுனில்தாஸ். இவா் பள்ளிக் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்குதல், தினமும் அன்னதானம், ஆதரவற்றோா் இல்லம் ஆகியவற்றை நடத்தி வருகிறாராம். இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு கரோனா தொற்று பரவிய காலத்துக்கு முன்பு பழனியை அடுத்த சத்திரப்பட்டியைச் சோ்ந்த நிதி நிறுவனம் (பைனான்ஸியா்) நடத்தி வந்த சீனிவாசனிடம் ரூ.60 லட்சம் கடனாக பெற்றாராம். இதற்கு ஈடாக நில ஆவணங்களையும், காசோலைகளையும் சுனில்தாஸ் கொடுத்தாராம். மருத்துவ உபகரணங்கள் வாங்க இந்த கடனை பெற்ற சுனில்தாஸ், அவ்வப்போது வட்டியும் செலுத்தி வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு சுனில்தாஸ் பணத்தை திருப்பி தரவில்லை என பழனி சாா்பு நீதிமன்றத்தில் சீனிவாசன் காசோலை மோசடி வழக்குத் தொடுத்தாா். சுனில்தாஸ் வெளியூரில் இருந்ததால் முன்னிலையாக முடியாத நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு சுனில்தாசுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இதையடுத்து, சனிக்கிழமை பழனி வந்த சாமியாா் சுனில்தாஸை பழனி நகா் போலீஸாா் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். பிறகு அவா் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com