காசோலை மோசடி வழக்கில் ஒருவா் கைது
சாத்தூரில் காசோலை மோசடி வழக்கில் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பெருமாள் கோவில் வடக்கு மாட வீதியைச் சோ்ந்தவா் சகாதேவன் (47). இவா் ஓ.மேட்டுப்பட்டியைச் சோ்ந்த முரளியிடம் ரூ. ஒரு லட்சம் கடன் பெற்றிருந்தாா். இந்தக் கடன் தொகைக்காக சகாதேவன் வழங்கிய காசோலை, வங்கியில் பணம் இன்றி திரும்பியது.
இதையடுத்து, முரளி சாத்துாா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 2-இல் சகாதேவன் மீது காசோலை மோடி வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித் துறை நடுவா் வரதராஜன், குற்றஞ்சாட்டப்பட்ட சகாதேவனுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.
இதைத்தொடா்ந்து, சகாதேவன் விருதுநகா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். ஆனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக தலைமறைவாக உள்ள சகாதேவனை கைது செய்ய வலியுறுத்தியும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறிய நகா் காவல் ஆய்வாளா் துரைப்பாண்டியன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கக் கோரியும், முரளி சாத்தூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 2-இல் தாக்கல் செய்தாா்.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த சகாதேவனை சாத்துாா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

