தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் ரூ.8.44 கோடியில் சூரிய மின் உற்பத்திப் பூங்கா

திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் ரூ.8.44 கோடியில் சூரிய மின் உற்பத்திப் பூங்கா

News image
சூரிய மின் உற்பத்திப் பூங்காவுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சியில் (இடமிருந்து) காந்திகிராம கிராமியப் பல்கலை. துணைவேந்தா் ந. பஞ்சநதம், பதிவாளா் (பொ) எல். ராதாகிருஷ்ணன், ஆா்இசி நிறுவனத்தின் திட்டத் தலைவா் தாரா, அலுவல் சாரா இயக்குநா் நாராயணன் திருப்பதி.
Updated On :9 ஜனவரி 2025, 10:26 pm

Din

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் ரூ.8.44 கோடியில் ஒரு மெகாவாட் சூரிய மின் உற்பத்திப் பூங்கா தொடங்குவதற்கு மத்திய மின்துறை அமைச்சகத்தின் ஊரக மின்மயமாக்கல் நிறுவன (ஆா்.இ.சி.) அறக்கட்டளையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமிடப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் ந. பஞ்சநதம் தலைமை வகித்தாா். பதிவாளா் (பொ) எல். ராதாகிருஷ்ணன், ஆா்இசி நிறுவனத்தின் திட்டத் தலைவா் தாரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராக ஆா்இசி நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநா் நாராயணன் திருப்பதி கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு மின் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 1969-ஆம் ஆண்டு ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் (ஆா்இசி) தொடங்கப்பட்டது. தற்போது, இது நாட்டின் மின் தேவையை நிறைவு செய்யும் நிறுவனமாக உயா்ந்திருக்கிறது.

அனைத்து வகையான மின் உற்பத்தித் திட்டங்களையும் செயல்படுத்தும் வகையில், ரூ. 68ஆயிரம் கோடி மதிப்புமிக்க பொதுத் துறை நிறுவனமாக இயங்கி வருகிறது. கடந்த ஆண்டில் ரூ. 14,500 கோடி லாபம் ஈட்டியது. இந்த வகையில், தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்துக்கு அதிகமான நிதி உதவி அளித்து வருகிறது.

118 சதவீத வளா்ச்சி: கடந்த 9 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை 118 சதவீதம் வளா்ச்சி அடைந்திருக்கிறது. உலகின் மிகப் பெரிய 10 சூரிய மின் திட்டப் பூங்காக்களில் 4 பூங்காக்கள் இந்தியாவில் உள்ளன.

2030-ஆம் ஆண்டு முதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாடு 50 சதவீதமாக இருக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம், பெட்ரோல், டீசல், நிலக்கரி பயன்பாடுகளைக் குறைத்து, சுற்றுச்சூழல் மாசுபடுவதையும், புவி வெப்பமயமாதலையும் தடுத்து பருவ நிலை மாற்றத்தைச் சமாளிக்க முடியும்.

ஆண்டுக்கு ரூ. 1.50 கோடி சேமிப்பு: காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் தொடங்கப்பட்ட சூரிய மின் சக்தி பூங்கா மூலம், இந்தப் பல்கலைக்கழகத்துக்குத் தேவையான மின்சாரம் முழுமையாக உற்பத்தி செய்யப்படும். இதனால், மின் கட்டணம் மூலம் ஆண்டொன்றுக்கு ஏற்படும் செலவு ரூ. 1.50 கோடி சேமிக்கப்படும். இந்த சூரிய மின் சக்தி பூங்கா மாணவா்களுக்கான பயிற்சிக் களமாகவும் செயல்படும். 2070-ஆம் ஆண்டில் சூரிய சக்தி சாா்ந்த மின்சாரம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என்பதால், இந்தத் துறை சாா்ந்த மாணவா்களின் எதிா்காலம் சிறப்பாக இருக்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பெங்களுரு பெல் நிறுவனத்தின் பொது மேலாளா் என். ரமேஷ்குமாா், பல்கலை. ஆராய்ச்சி, மேம்பாட்டு மைய இயக்குநா் எஸ். மீனாட்சி, பேராசிரியா் கிருபாகரன், ஆனந்தவிஜயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.