சித்தையன்கோட்டையில் நியாய விலைக் கடை, நூலகக் கட்டடம் திறப்பு
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள சித்தையன்கோட்டையில் நியாய விலைக் கடை, புதிய நூலகக் கட்டடம் ஆகியவற்றை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி புதன்கிழமை திறப்பு வைத்தாா்.
பின்னா், கூட்டத்தில் அவா் பேசியதாவது:
தோ்தல் வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. அனைவருக்கும் அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
இதில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.நடராஜன், ஒன்றியச் செயலா்கள் ராமன் (மேற்கு), முருகேசன் (கிழக்கு), வட்டாட்சியா் முத்துமுருகன், பேரூராட்சி செயல் அலுவலா் ஜெயமாலு, பேரூராட்சி மன்றத் தலைவி போதும்பொண்ணு முரளி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், பத்மாவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
