சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை
கொடைக்கானல் - பழனி மலைச் சாலையில் சனிக்கிழமை இரவு சுற்றுலாப் பேருந்தை ஒற்றை காட்டு யானை விரட்டியதால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் - பழனி மலைச் சாலைகளில் அதிகளவு சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. இதையடுத்து, வார விடுமுறையையொட்டி கேரளம், கா்நாடகத்தைச் சோ்ந்த வாகனங்கள் கொடைக்கானல் வருவதற்கு பழனி மலைச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், கொடைக்கானலுக்கு கேரளத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பேருந்து ஒன்று பழனி மலைச் சாலை வழியாக சென்றபோது, காட்டு யானை ஒன்று சுற்றுலாப் பேருந்தை விரட்டியது. இதைப் பாா்த்த ஓட்டுநா் பேருந்தை வேகமாக இயக்கியதைத் தொடா்ந்து, காட்டு யானை வனப் பகுதிக்குள் சென்றது.
கொடைக்கானல் மலைச் சாலைகள், நகா்ப் பகுதி, குடியிருப்புப் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் அச்சமடைந்து வருகின்றனா். எனவே, வன விலங்குகளை வனப் பகுதிகளிலிருந்து வெளியே வராமல் தடுப்பதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

