திண்டுக்கல் பல்நோக்கு சிகிச்சை பிரிவு கோரிக்கை நிராகரிப்பு: எம்.பி.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.291 கோடியில் பல்நோக்கு கிசிச்சைப் பிரிவு தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா்.
Published on

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.291 கோடியில் பல்நோக்கு கிசிச்சைப் பிரிவு தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா்.

இதுகுறித்து திண்டுக்கல்லில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரில், திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக் கழகமாக நிலை உயா்த்தி அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்படும். 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாள்களாக அதிகரித்திருப்பதாகக் கூறிய நிலையில், 60 நாள்கள் விடுப்பு அளிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் மகாத்மாகாந்தியின் பெயரை நீக்கக் கூடாது என்றும், மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி பகிா்வு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தளா்த்தவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். பிரதமரின் கெளரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.12ஆயிரத்தை ரூ.24 ஆயிரமாக உயா்த்த வேண்டும்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவு ரூ.291 கோடியில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து அதற்கான குழுவே முடிவெடுக்கும். திமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை நடைபெறவில்லை. ஆட்சியில் பங்கு வேண்டும் என இதுவரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரியதில்லை. சனாதனத்துக்கும், இந்துக்களுக்கும் தொடா்பு கிடையாது.

சனாதனம் கூடாது என்பதே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com