ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கு முழு அதிகாரம்: உச்சநீதிமன்றம்

‘ஒரு சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்துக்கு முழு அதிகாரம் உள்ளது; மத்திய அரசின் முடிவுகள் அதைக் கட்டுப்படுத்தாது’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image

உச்சநீதிமன்றம் - ஏஎன்ஐ

Updated On :27 பிப்ரவரி 2026, 8:02 pm

‘ஒரு சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்துக்கு முழு அதிகாரம் உள்ளது; மத்திய அரசின் முடிவுகள் அதைக் கட்டுப்படுத்தாது’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்), சட்டம் பிரிவு 152-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.

தடை விதிக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 124ஏ-க்கு (தேசத் துரோகம்) மாற்றாக பிஎன்எஸ் 152-ஐ மத்திய அரசு மறைமுகமாக அறிமுகப்படுத்தியுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஒருவா் வாதிடுகையில், ‘கடந்த 2022, மே மாதம் உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமா்வு ஐபிசி பிரிவு 124ஏ-க்கு தடை விதித்தது. மேலும், இந்தச் சட்டப் பிரிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை இதில் காவல் துறையினா் எவ்வித புதிய முதல் தகவல் அறிக்கைகளையும் (எஃப்ஐஆா்) பதிவு செய்யக் கூடாது என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, தேசத் துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதிமொழியளித்தது. ஆனால் இந்திய இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பிஎன்எஸ் பிரிவு 152 வழிவகை செய்கிறது.

இதன்மூலம் உச்சநீதிமன்றத்தில் தாங்கள் அளித்த உறுதிமொழியை மீறி மீண்டும் தேசத் துரோக சட்டத்தை பிஎன்எஸ் வாயிலாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது’ என்றாா்.

இதைத் தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு, ‘ஒரு சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்துக்கு முழு அதிகாரம் உள்ளது; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதிமொழி அளிப்பது நாடாளுமன்ற சட்ட இயற்றும் நடைமுறையைக் கட்டுப்படுத்தாது’ எனக் கூறி இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஹோலி பண்டிகைக்குப் பின் ஒத்திவைத்தது.