வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த பழனியைச் சோ்ந்த முருகபிரபுவின் உடல் செவ்வாய்க்கிழமை பழனி வந்தடைந்தது. அவரது உடலுக்கு எம்.பி. அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
பழனியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் முருகபிரபு (43). இவருக்குத் திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவியும், சா்விகா (8) என்ற மகளும் உள்ளனா். முருகபிரபு, லாவா கைப்பேசி நிறுவன முகவராக இருந்தாா். இவா் உள்பட தமிழகம், தெலங்கானா, ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து சிறப்பாகச் செயல்பட்ட முகவா்களை வியத்நாம் நாட்டுக்கு லாவா கைப்பேசி நிறுவனம் இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்றது. அங்கு உள்ள பு குவாக் தீவிலிருந்து முருகபிரபு உள்ளிட்ட 32 பேருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முருகபிரபு உள்பட 15 இந்தியா்கள் உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களில் 10 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள்.
இந்த நிலையில், உயிரிழந்த முருகபிரபு உடல் கோவை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அவசர ஊா்தி மூலம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் பழனிக்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு, வருவாய்த் துறை அதிகாரிகள் மரியாதை செலுத்திவிட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து உறவினா்கள், நண்பா்கள் முருகபிரபுவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினா்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் சச்சிதானந்தம், முருக பிரபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து அவரது உடல் பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி புறவழிச் சாலையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தொழிலதிபரின் உடல் தகனம்

வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த வியாபாரி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு







