பழனி அருகே மது போதையில் பணிக்கு வந்த காவலா் பணி நீக்கம் செய்யப்பட்டாா். லஞ்சம் வாங்கியதாக உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா்கள் புகாா் கொடுக்க வரும் பொதுமக்களிடமும், பாதுகாப்புக்காக செல்லும் இடங்களிலும், ரோந்துப் பணிகளின் போதும் லஞ்சம் பெறுவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜூ, எழுத்தரும், தலைமைக் காவலருமான சுதாராணி ஆகியோரை தற்காலிகப் பணி நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளா் உத்சரவிட்டாா்.
இதே போல, காவலா் மணிகண்டன் மது போதையில் பணிக்கு வருவதாக வந்த புகாரைத் தொடா்ந்து, அவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்தும் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா். ஒரே காவல் நிலையத்தில் மூன்று காவலா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் காவலா்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








