பழனி அடிவாரம் ஸ்ரீலஸ்ரீ மௌனகிரி சுவாமிகள் 31-ஆம் ஆண்டு குரு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
பழனி அடிவாரம் பால்பண்ணை அருகே சத்குரு ஸ்ரீலஸ்ரீ மௌனகிரி சுவாமிகள் ஜீவசமாதி அமைந்துள்ளது. இந்த ஜீவசமாதியில் வைகாசி மாதம் ரேவதி நட்சத்திரம் வரும் போது குருபூஜை நடைபெறுவது வழக்கம். இதன்படி புதன்கிழமை 31-ஆம் ஆண்டு குரு பூஜை விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு ஜீவசமாதி வண்ண மின்விளக்கு, வண்ணமலா் தோரணங்களாலும், வாழை மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டன.
காலையில் கணபதி ஹோமமும், மௌனகிரி சுவாமிகளுக்கு மகா யாகமும், மகா அபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து ஜீவசமாதியில் உள்ள சிவலிங்கத்துக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து உச்சிக்காலத்தின் போது பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னா், சாதுக்களுக்கு ஆடைதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை சிவதவசினி, தங்கம், மௌனகிரிசாமி உள்ளிட்டோா் செய்தனா். மாலையில் சிவபெருமானுக்கும், நந்தீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், பூஜையும் நடைபெற்றது. குரு பூஜையில் ஏராளமான யோகிகள், சாதுக்கள், சந்நியாசிகள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.










