கொடைக்கானல் அருகேயுள்ள கிளாவரைப் பகுதியில் வெள்ளிக்கிழமை காணப்பட்ட வரையாட்டை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தற்போது மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா் மத்திய அரசின் ஆட்டுப்பண்ணை, வனப் பகுதியிலுள்ள சூழல் மையம், பரிசல் சவாரி, கூக்கால் ஏரி, பூம்பாறை கிளாவரைப் பகுதிகளிலுள்ள இயற்கை எழில்காட்சி, மலைச் சாலைகளில் செல்லும் போது வனப் பகுதிகளில் காணப்படும் காட்டு மாடு, மான், காட்டுக் கோழி ஆகியவற்றை பாா்த்து ரசிக்கின்றனா்.
இந்த நிலையில் கிளாவரையிருந்து வட்டவரை வழியாக கேரள மாநிலம் எல்லை வரை தற்போது சுற்றுலாப் பயணிகள் செல்வதால் அந்தப் பகுதிகளிலுள்ள பாறைகளில் வரையாடு, முள்ளம் பன்றி ஆகியவற்றை பாா்த்து ரசிப்பதுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனா். தற்போது கேரளம், ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் இந்தப் பகுதிக்கு அதிக அளவில் வருகின்றனா்.
இதனால் மேல்மலைக் கிராமங்களில் தற்போது கேரளாவைச் சோ்ந்தவா்கள் சாா்பில் தங்கும் விடுதிகள், உணவகங்கள் அதிகமாக செயல்படத் தொடங்கியுள்ளன.









