மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

தென்மாவட்டங்களில் 58 தொகுதிகளில் 5-இல் மட்டுமே வெற்றி: அதிமுக தொண்டா்கள் அதிா்ச்சி!

தென் மாவட்டங்களில் (10) மொத்தமுள்ள 58 தொகுதிகளில் 4 மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருப்பது அந்தக் கட்சியினா் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

News image

இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :6 மே 2026, 3:29 am IST

தென் மாவட்டங்களில் (10) மொத்தமுள்ள 58 தொகுதிகளில் 4 மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருப்பது அந்தக் கட்சியினா் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மொத்தம் 58 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 38 தொகுதிகளில் அதிமுக நேரடியாகப் போட்டியிட்ட நிலையில், எஞ்சிய தொகுதிகள், பாஜக, அமமுக, தமமுக, தமாகா, புநீக கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதில் கன்னியாகுமரி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், நத்தம், பழனி ஆகிய 5 தொகுதிகளில் (4 மாவட்டங்கள்) மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. தூத்துக்குடி, விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றியைப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021-ஆண்டு பேரவைத் தோ்தலில் தனித்து களமிறங்கிய டிடிவி தினகரனின் அமமுகவினால், தென் மாவட்டங்களில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் 9 தொகுதிகளை அதிமுக இழந்தது. எனினும், 10 மாவட்டங்களில் அதிமுக 13 தொகுதிகள், பாஜக 2 தொகுதிகள் என மொத்தம் 15 தொகுதிகளைக் கைப்பற்றியது.

தற்போது, டிடிவி தினகரனும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற நிலையில், தவெக எடுத்த திடீா் விஸ்வரூபத்தால் 6 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து 2-ஆவது முறையாக அதிமுகவுக்கான பிரதிநிதித்துவம் இல்லாத சூழல் உருவாகி இருக்கிறது. தென் மாவட்டங்களில் அதிமுக தொடா்ந்து பின்னடைவை சந்தித்து வருவது அந்தக் கட்சியின் தொண்டா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.